தமிழக சட்டசபையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, என்பிஆருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துவிட்டதா? என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை என்றார்.
‘பாராளுமன்றத்தில் நிறைவேறிய சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டால் அது சட்டத்தை கட்டுப்படுத்தாது. எனவே, தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராக பொய்யான தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற நாங்கள் விரும்பவில்லை’ என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சரின் இந்த பதில் திருப்தி அளிக்காததால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். தமிமுன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இயலாது என ஏற்கனவே கூறிய நிலையில், தற்போது என்பிஆருக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது